Jul 14, 2011

லத்திகா பார்ட் - 2 அதிரடி ஆரம்பம்



தமிழகத்தின் இளம் சிங்கம் பவர் ஸ்டார் சீனிவாசன் நடித்து, நூற்று ஐம்பது நாட்களுக்கு மேலாக திரையரங்கில் ஓடி கொண்டிருக்கும் "லத்திகா" என்ற திரைக் காவியத்தால் தமிழ் திரையுலகம் புத்துணர்ச்சி பெற்றுள்ளது.

இப்படத்தின் கலெக்சன், உலகம் முழுவதும் வெளியான அவதார் படத்தின் கலெக்சனை இன்னும் நான்கே நாட்களில் முறியடித்து விடும் என்ற செய்தி ஹாலிவுட் நடிகர்களையும், இயக்குனர்களையும் புருவம் உயர்த்த வைத்துள்ளது. இப்படத்தை காண ஜேம்ஸ் காமரூனும், டாம் குரூசும் விருப்பம் தெரிவித்துள்ளனர். ஒபாமாவும் இதை பார்க்க விரும்புவதாக சொன்ன செய்தி டைம்ஸ் பத்திரிக்கையின் தலைப்பு செய்தியாக வந்துள்ளது.

படத்தை ஆங்கில சப் டைட்டில் உருவாக்கி அடுத்த வருடத்திற்கான ஆஸ்கார் விருதுக்கு அனுப்புமாறு, ஆஸ்கார் கமிட்டி வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதனால் உலகநாயகன் முதல், சகல தமிழ் நடிகர்கள் அனைவரும் பயந்து, பீல்டில் தொடர்ந்து நிலைக்க, தங்கள் அடுத்தப் படத்துக்கான கதையை மிகுந்த கவனமுடன் கேட்டு வருகிறார்கள்.

எந்திரன் படத்தால் பாதிப்பு அடைந்த திரையரங்கு உரிமையாளர்கள், இப்படத்தின் லாபத்தால் அந்த கவலையை மறந்து மகிழ்ச்சியில் புன்னகை பூக்கின்றனர். திரையரங்குக்கு மக்கள் கூட்டம் கூட்டமாகவும், சாரை சாரையாகவும் தொடர்ந்து வந்து படத்தை பார்த்த வண்ணம் உள்ளனர்.

இதனால் இனி இருநூறு, முந்நூறு நாட்கள் என்று போஸ்டர் ஒட்டாமல், மொத்தமாய் காத்திருந்து "ஆயிரம் நாட்கள்" போஸ்டர் ஓட்டலாம் என்றும் பவர் ஸ்டார் பலமாக யோசித்து வருகிறாராம்.

இவருக்கு பெண்கள் மத்தியில் உள்ள கிரேஸ் எவ்வளவு என்பதற்கு, எஸ்.எஸ் மியூசிக் சேனல் நடத்திய "எனிதிங் பார் சீனி" என்ற நிகழ்ச்சி அந்த சேனலின் டி.ஆர்.பி ரேட்டிங்கை ஒரு மாதத்திற்கும் மேலாக எகிறச் செய்ததே சாட்சி. அந்த நிகழ்ச்சியில் ஒரு பெண் அவரை சந்திப்பதற்காக கூவத்திலும் குளிக்க ரெடி என்று தெரிவித்தார். இன்னொரு பெண் அவரின் கட்டுமஸ்தான உடலும், முரட்டு மீசையும் தன்னை தினமும் இரவில் இம்சிப்பதாக சொல்லி வழிந்தார்.

லத்திகாவின் வெற்றியை தொடர்ந்து லத்திகா பார்ட் 2 எடுக்கப் போவதாக அதிரடியாக அறிவித்துள்ளார் பவர் ஸ்டார். ஆனால் பார்ட் - 2 வை சீக்கிரம் எடுத்தாலும், இன்னும் ஒரு வருடம் கழித்தே வெளியிடுவதாயும் குறிப்பிட்டார். லத்திகா முதல் பார்ட்-இன், ஹெங் ஓவரே (Hang Over) இன்னும் மக்களிடம் போகாத நிலையே, அதற்கு காரணம் என்றும் தெரிவித்தார்.

லத்திகா பார்ட் 2 எடுக்கப் போவதாக வந்த செய்தியை அடுத்து, தமிழிலும் இந்தியிலும் முன்னணி நடிகைகளிடம் போட்டா போட்டி உருவாகியுள்ளது. நெருங்கி தோழிகளான திரிஷாவும் ஸ்ரேயாவும் ஒரு நைட் கிளப்பில் இவ்விசயத்தால் தலைமுடியை பிடித்து சண்டை போட்டுள்ளனர்.

அவருடன் நடிப்பது பற்றி அனுஷ்காவிடம் கேட்ட போது, அடுத்த இரண்டு வருடங்களுக்கு தன் கால்சீட் புல்லாக இருந்தாலும், பவர் ஸ்டாருடன் ஜோடி சேர அவர் எந்த படத்தின் கால்சீட்டையும் ட்ராப் செய்வதாக உணர்ச்சி வசப்பட்டு பேசினார்.

ஆனால் பவர் ஸ்டார் என்ன நினைக்கிறார் என்ற ஆவலில் அவரை தொடர்பு கொண்டு கேட்டபோது, அவரின் சாய்ஸ் தீபிக படுகோன் அல்லது சொனாக்சி சின்கா. வயசானதால் ஐஸ்வர்யாவை அவர் கணக்கில் எடுத்து கொள்ள வில்லை. காத்திரீனா கைப்பையும் கண்ணசைவில் கழட்டி விட்டார்.

ஏகப்பட்ட தமிழ் நடிகர்களிடம் நடிக்க மறுத்து அவமான படுத்திய இலியானா, பவர் ஸ்டார் வீட்டு வாசலில் வாய்ப்பு கேட்டு பலமணி நேரம் நின்றும், அவர் கதவை திறக்க வில்லை. மனதையும் திறக்க வில்லை.

லத்திகா பார்ட் - 2, 2012 ஆம் ஆண்டின்  இறுதியில் வெளியாகி, ஆண்டுகள் கணக்காக வெற்றிநடை போட்டு, "மாயன்ஸ் காலண்டர் படி 2012 - இல் உலகம் அழியும்" என்ற கூற்றையும் முற்றிலும் பொய்யாக்கும் என்பதே நம் எல்லோருடைய நம்பிக்கை.

6 comments:

  1. Nice Blog..
    Please Read this also http://tamilpadaipugal.blogspot.com/2011/07/blog-post_5577.html

    ReplyDelete
  2. ஏன்,இந்தக் கொலை வெறி?????
    ரொம்பவே ரசித்தேன்,சிரித்தேன்.

    ReplyDelete
  3. welcome to:http://mugamoody.blogspot.com/

    ReplyDelete
  4. நம்ம தலைவன் சீனிவாசன பத்தி இவ்ளோ அருமையான கட்டுரையா ?? ஒரு சின்ன டவுட்டு < லத்திகா படத்தின் கதை என்ன ??

    ReplyDelete