Mar 21, 2012

அடுத்த படத்தில் கமலுக்கு ஆஸ்கார்.

இந்திய சினிமா வரலாற்றில், நடிப்பில் ஆஸ்கார் அவார்ட் வாங்க திறமையான நடிகர் பல நூற்றாண்டுகளாக ஒரு நடிகர் காத்துக் கொண்டிருக்கிறார் என்று சொன்னால், அது ஒருவர் தான். 

"உலக" நாயகன் கமல் ஹாசன்.



ஹேராம், தசவதாரம், அவ்வை சண்முகி என நிறைய படங்கள் மூலம் தனது நடிப்பு திறமையால் ஆஸ்கார் வாசலை வரை போய், ஏதும் கிடைக்காமல் திரும்பி வந்தார்.

நடிப்பு திறமை மட்டுமல்லாது கமலின் மற்ற ரசனைகளும் அதிகமாய் மக்களிடையே பரவலாய் பேசப் படுகிறது. குறிப்பாக உலக மொழி படங்களை பார்க்கும் அவரது ரசனை. நிறைய உலக மொழி படங்களை பார்ப்பதனாலேயே அவருக்கு உலக நாயகன் என்ற அடைமொழி வந்ததாக ஒரு கருத்தும் நிலவுகிறது. 

அவரது காத்திருப்புக்கு இப்போது விடிவு காலம் வந்து விட்டது. செல்வராகவன், கமலை வைத்து இயக்கவிருந்த "விஸ்வரூபம்" படம் டிராப் ஆகி அதை வேறு ஒருவர் இயக்குகிறார். அதனால் செல்வராகவன் கமலை வைத்து மீண்டும் வேறு ஒரு படம் இயக்கவுள்ளார்.

இந்த படத்தின் கதையை பற்றி, செல்வராகவன் நமது Tamil Faking நியூஸ்-க்கு அளித்த பேட்டியில், "ஆஸ்கார் வாங்குவதே தன் குறிக்கோள் என்று பல நூற்றாண்டுகளாக போராடும் ஒரு உண்மையான கலைஞனின் கதை. கதையின் படி, ஹீரோ ஒரு சினிமா நடிகர். இவர் கஷ்டப் பட்டு நடித்த படங்களை காப்பி அடித்து, நடித்த ஹாலிவுட் ஹீரோக்கள் மிக பிரபலம் அடைந்து விடுகிறார்கள். பின்னர் மறுபடியும் கஷ்டப்பட்டு நடித்து படத்தின் கிளைமாக்ஸ் சீனில், கமல் ஆஸ்கார் வாங்குகிறார்." என்றார்.

ஹாலிவுட் நடிகர் கேரக்டர் உட்பட இந்த படத்தின் எல்லா கேரக்டர்களையுமே கமலே செய்யவிருப்பது இந்த படத்தின் சிறப்பம்சம். இதற்காக நிறைய கண்டைனர் லாரிகளில் மூட்டை மூட்டையாய் மைதா மாவுகள் வட நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப் படவுள்ளன. 


Mar 19, 2012

கலைஞரின் அடுத்த உண்ணாவிரதம், சிரிப்பொலி டிவியில் நேரடி ஒளிபரப்பு

இலங்கையின் போர் குற்றத்திற்கு எதிரான, அமெரிக்க தீர்மானத்திற்கு இந்திய அரசு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி ஆரம்பிப்பதாக இருந்த, கலைஞரின் உண்ணாவிரதம் பெரும் வெற்றியடைந்தது.



இலங்கையில் நடைபெற்று கொண்டிருந்த போரை நிறுத்த கோரி, மெரீனா பீச்சில் அரை நாளுக்குள் அரங்கேற்றம் நடத்திய முதல் உண்ணாவிரத வெற்றி, உலகப் புகழ் அடைந்தது குறிப்பிடத்தக்கது. அந்த செய்தி நியூயார்க் டைம்ஸ் இதழின் முதல் பக்க பெட்டி செய்தியில் அப்போது வெளியானது.

ஆனால் இவர் இரண்டாம் உண்ணாவிரதத்தால், முதல் உண்ணாவிரதத்தை முறியடித்து, கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறவிருக்கிறார். சச்சினை போல தொடர் சாதனை புரிந்து அவுட் ஆகாமல், நூறு உண்ணாவிரதம் காண Tamil Faking நியூஸ் வாழ்த்துகிறது.

"கலைஞரின் உண்ணாவிரத செய்தி எங்களை எட்டியதும் எங்களுக்கு அவரது முதல் உண்ணாவிரதம் நியாபகம் வந்தது. இன்னொரு உண்ணாவிரதத்திற்கு இந்த உலகம் தாங்காது என்பதால் நாங்கள் இந்த முடிவுக்கு வந்தோம்" இவ்வாறு சோனியா நமது Tamil Faking நியூஸ்க்கு பேட்டியளித்தார். அருகில் இருந்த மன்மோகன் சின் ஆமாம் என்பது போல் தலையசைத்துக் கொண்டே இருந்தார்.

கலைஞர் தாத்தாவின் இந்த உண்ணாவிரத வெற்றியின் சூட்சுமம் என்னவாக இருக்கும் என்று வியப்பில் ஆழ்ந்துள்ளார் அன்னா ஹசாரே. "கலைஞரிடம் இருந்து அன்னா ஹசாரே எப்படி உண்ணாவிரதம் இருப்பது? என்பதை நிறைய கற்று கொள்ள வேண்டும்" என்று ராமதாஸ் தன் ட்விட்டரில் கூறியுள்ளார்.

இந்த தொடர் உண்ணாவிரத வெற்றியால், "அண்ணா நூற்றாண்டு நூலகம் இடித்தால் நான் தீக்குளிப்பேன்" என்று கலைஞர் அசட்டையாக தனக்கே தெரியாமல் உளறியதை வாபஸ் வாங்கி கொண்டு, அதற்கு பதில் அடுத்த வாரம் முதல் பெசன்ட் நகர் பீச்சில் உண்ணாவிரதம் இருக்கப் போவதாய் கூறினார். 

இதனால் பெசன்ட் நகர் பீச்சில் உண்ணாவிரதம் இருக்க தடபுடலாக ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இரண்டு ஷாட் காட்சிகளை படம் எடுக்க, கலை இயக்குனர் தோட்டா தரணியை வைத்து ஒரு பிரமாண்ட செட் போட்டு வருகிறார்கள். கட்டில், மெத்தை மற்றும் குளிர்சாதனப் பெட்டிகள் எல்லாம் தயார் நிலையில் வைக்கப் பட்டுள்ளனவாம். இரு மனைவிகள் சகிதம் கட்சி அடிப்பொடிகளுடன் தலைவர் அடுத்த வாரம் ஆஜர் ஆகிவிடுவார்.

                                 

இந்த விஷயம் கேள்விப் பட்டதும், போயஸ் கார்டன் பகுதியில் 1.6 என்ற அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஹெக்டர் அளவுகோலில் பதிவானது.  

எடியுரப்பாவும் தன்  இழந்த முதல்வர் பதவியை மீட்க உண்ணாவிரதம் இருக்கப் போவதாய் கர்நாடகாவிலிருந்து நம் சிறப்பு நிருபர் தெரிவித்தார். இதைடுத்து பா.ஜா.க தலைமை இடத்தில் பதற்ற சூழ்நிலை நிலவுகிறது.
 


Mar 15, 2012

ரஜினியின் அடுத்த படத்தில், நித்தியானந்தா வீடியோவை கிராபிக்ஸ் பண்ணியவர்


தானும், தன்னால் பிரபலமான நடிகை ரஞ்சிதாவும் ஒன்றாக இருப்பது போல் வெளியான வீடியோ போலியானது என நித்தியானந்த சுவாமிகள் தெரிவித்துள்ளார்.

இதனால், அதை உண்மையானது போல் மிக தத்ரூபமாக உருவாக்கிய அந்த முகம் தெரியாத கிராபிக்ஸ் நிபுணருக்கு, தமிழ் சினிமாவில் மிக பெரிய எதிர்காலம் உருவாகும் வாய்ப்புள்ளது.

சமீபத்தில் வெளியான "அரவான்" படத்தில் வரும் கிராபிக்ஸ் காட்சிகளின் தரம் மோசமானதாய் இருந்தது. கிராபிக்ஸை சரியாய் பண்ணியிருக்கும் பட்சத்தில் படத்திற்கு அது கூடுதல் பலமாக இருந்திருக்கும் என அதன் இயக்குனர் வசந்த பாலன் சொன்னார்.

இனி தன் படங்களிலும், ஹாலிவுட் ஆட்களை வைத்து, அதிக பணம் செலவழித்து கிராபிக்ஸ் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது என்று பிருமாண்ட இயக்குனர் சங்கர் தெரிவித்தார். ரஜினியும் அவரது படங்களில் அவரை வயது குறைவான ஆளாக காண்பிக்க செய்து, சச்சினை போல ரிடைர்டு ஆகாமல் தொடர்ந்து நடித்துக் கொண்டே இருக்கும் ஐடியா உள்ளதாக, உலக மகா நடிகர் கமல்ஹாசனுடன் கலந்தாலோசித்துள்ளதாக செய்தி கசிந்துள்ளது. 

"என்னுடன் முன்னணி நடிகைகள் யாரும் நடிக்க முன் வரவில்லை என்றால் கூட, இந்த கிராபிக்ஸ் நிபுணரை வைத்து, நான் ஏஞ்சலினா ஜோலியுடன் நடித்தது போல் படம் எடுத்து வெளியிடுவேன்" என்று தற்போதை முன்னணி நட்சத்திரம் "பவர் ஸ்டார்" சீனிவாசன் நமது Tamil Faking நியூஸ்-க்கு பேட்டியளித்தார். கடைசியாக இவர் நடிக்க கூப்பிட்டு, நடிகை ஹன்சிகா அவர்கள், இவரது முகத்தில் காரி துப்பியது குறிப்பிடத்தக்கது.




அந்த போலி வீடியோ வெளியான நேரத்தில், நடிகர் வடிவேலு கூட நித்தியானதா கெட்டப்பில் நடிப்பதாக செய்தி வெளியானது. அதை கேள்விப்பட்ட நித்தியானதா, வடிவேலுவை "என்னுடைய கெட்டபில் நடித்தால், நீ அட்ரஸ் இல்லாமல் போய் விடுவாய்" என எச்சரித்தார்.

அவரின் சொல்படியே வடிவேலு தமிழ் சினிமாவில் முகவரி தொலைந்து காணாமல் போய் விட்டார். 

அதனால் அந்த போலி வீடியோவை உருவாக்கிய முகம் தெரியாத நபரை உங்கள் யாருக்காவது தெரிந்திருந்தால், தமிழ் இயக்குனர்கள் சங்க தலைவர் எஸ்.எ.சந்திரசேகரிடம் சொல்லவும். நடிக்கவே தெரியாத தன் மகனுக்கும் உதவியாய் இருக்கும். தமிழ் சினிமா உலகம் உங்களுக்கு என்றும் கடமை பட்டிருக்கும்.