Jul 22, 2011

காப்பி அடிக்க பயப்படும் தமிழ் சினிமா இயக்குனர்கள்

சமீப காலமாக வெளிவரும் தமிழ் சினிமாவின் கதைகள் உலகப் படங்களில் இருந்து திருடப் பட்டவையே. 

ஒரு படத்தை காப்பி அடித்து எடுத்து விட்டு "பத்து வருடத்திற்கு முன்னாலேயே நான் இந்த கதையை யோசித்தேன் என்று அவதார் பட இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் போல"  கூச்சப் படாமல் பந்தாவாய் நடிகைகளுடன் உட்கார்ந்து டிவிகளில் பேட்டி கொடுக்கும் இயக்குனர்கள் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது 

சமீபத்திய புதுவரவு "தெய்வத் திருமகள்". இதன் சிறப்பே ஹீரோவின் காஸ்ட்யும் முதற்கொண்டு ஹேர் ஸ்டைல் வரை அப்படியே அலேக்காக காப்பி அடித்தது தான்.

தமிழில் சொந்தமாய் கதை யோசித்து படம் எடுக்கும் இயக்குனர்கள் ஹரி, லிங்குசாமி, பேரரசு போன்ற ஒரு சிலரே.

"ஏன் இந்த இயக்குனர்கள் கவலைப் படாமல் காப்பி அடிக்கிறார்கள்?" என்ற கேள்விக்கு முண்ணனி ப்ளாகர் ஒருவர்,

"தமிழ் நாட்டின் பெருவாரியான மக்கள் உலக படங்கள் பார்க்காததே இதற்கு காரணம். இங்கு என்னைப் போன்ற சில சதவிகித மக்களே உலக படங்களுக்கு பரிட்சயம். படித்த மக்களின் அறிவே இன்னும் தமிழ்நாட்டை தாண்ட வில்லை. இன்னும் அவர்கள் கமலையும், ரஜினியையுமே கொண்டாடி கொண்டிருக்கிறார்கள். அதனால் தமிழ் சினிமாவின் எதிர்காலம் இருண்டகாலம் ஆகி கொண்டிருக்கிறது. இது தடுக்கப் பட வேண்டும். இல்லையென்றால் தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எந்த ஆண்டவனாளையும் காப்பாற்ற முடியாது."  என்று
பதிலளித்தார். 

இது போல படைப்பு திருட்டுகளை (plagiarism) ஒழிக்க, பிரபல பதிவர்கள் எல்லாம் சேர்ந்து, அந்தந்த ஒரிஜினல் படங்களை எடுத்த ஹாலிவுட் நிறுவனங்களுக்கு மெயில் அனுப்பி இத்திருட்டைப் பற்றி தெரிவிக்க ஆலோசித்துள்ளார்கள்.

ஊழலுக்கு எதிராக போராடும் அன்னா ஹசாரேவின் மெழுகுவர்த்தி போராட்டம் போல, இது மெயில் அனுப்பும் போராட்டம். 

வரும் ஞாயிற்றுக் கிழமை மெரீனா கடற்கரையில் காந்தி சிலைக்கு அருகில் பதிவர்கள் கூடி, சரியாக நாலு மணிக்கு ஒவ்வொருவரும் தங்கள் இன்டர்நெட் கனெக்சனுடன் கூடிய லேப்டாப்பில் இருந்து மெயில் அனுப்புவார்கள்.

மெரினாவுக்கு வரமுடியாத நபர்கள் வீட்டிலிருந்தோ அல்லது அருகில் உள்ள ப்ரொவ்சிங் சென்டர்களில் இருந்தோ மெயில் அனுப்பலாம்.

இந்த செய்தியை கேள்விப்பட்ட தமிழ் சினிமா இயக்குனர்கள் சங்கமே ஆடி போயிருக்கிறது.                                     



காப்பியடித்து படம் எடுத்து விட்டு கர்வத்துடனும், சிலசமயம் தன்னை யாரும் கொண்டாடவில்லையே என ஆதங்கத்துடனும் அலையும் மிஸ்கின் அவர்கள் தன் ரூமில் உலகப் படங்களின் சிடிக்கள் சிதறிக் கிடக்க, குவார்ட்டர் அடித்து நிலைகுலைந்து போயிருக்கிறார். ஒரு வாரம் அவர் தன்னுடைய கருப்பு கண்ணாடியை போடாமல் சுற்றி அலைந்ததாக தெரிகிறது.


 
"மங்காத்தாவின்" இறுதி கட்ட வேளைகளில் மூழ்கி இருந்த வெங்கட் பிரபுவோ, திரிஷாவிடம் போன் செய்து புலம்பி உள்ளார். தமிழ் ராப் இசை கலைஞன் பிரேம்ஜியும் அவருக்கு ஆதரவாய் திக்கி திக்கி நாலு வார்த்தை பேசியுள்ளார்.



இந்த செய்தியை கேள்விப்பட்டதிலிருந்து, கவுதவ் மேனன் அவர்கள் இரண்டு நாளாக சரியாக சாப்பிடவில்லையாம். தெய்வத் திருமகள் விஜய் அவர்கள், "விண்ணை தாண்டி வருவாயா" ஹிந்தி படப் பிடிப்பில் இருக்கும் எமி ஜாக்ஸனிடம் சாட் செய்து தன் மனகுமுறலை வெளிப்படுத்தி உள்ளார்.



எதோ ஒரு உலகப் படத்தை உருவி, அந்த கதையை எப்படி மாற்றி கொத்து பரோட்டா போடலாம் என சீரியஸாக கதை விவாதத்தில் இருக்கும் "மாற்றான்" படத்தின் இயக்குனர் கே.வி ஆனந்த், இந்த படத்தை ட்ராப் பண்ணி விடலாமா என யோசித்து வருகிறார்.

இதனால் இந்த தமிழ் சினிமா இயக்குனர்கள் அனைவரும் அடுத்து எந்த ஒரு படத்தையும் காப்பி அடிக்க முடியாத சூழ்நிலைக்கு தள்ளப் பட்டுள்ளனர்.

ஆங்கில காப்பி படங்களில் நடிக்கும் உலக நாயகன் கமல் உட்பட முன்னணி நடிகர்கள் அனைவரின் எதிர்காலமும் இதனால் கேள்வி குறியாகி உள்ளது.

சாதரணமாக தமிழ் பாடல்களை ரீமேக் பண்ண மறுத்து, ஆங்கில பாடல்களை மட்டுமே காப்பி அடிக்கும் ஜீவி பிரகாஷ் அவர்கள் இந்த மெயில் போராட்டத்தை பற்றி கருத்து சொல்ல மறுத்து விட்டார்.

தங்கள் தகிடு தத்தங்களை உலகுக்கு தெரிவிப்பதில் கூகுளின் பிளாகரும், வோர்ட் பிரஸ்சும் முக்கிய பங்கு வகிப்பதால் அவற்றை தடை செய்ய முடியுமா? எனவும் கனவு காண்கிறார்கள்.







இனி ஹரி, லிங்குசாமி, பேரரசு காட்டில் மழை தான். அவர்களின் படங்களில் நடிக்க இனி ஒவ்வொரு ஹீரோவும் "அவன் இவன்" விஷால் ஆர்யா போல கட்டி புரண்டு சண்டை போடுவார்கள்.


Jul 18, 2011

தெய்வ திருமகள் - கர்ச்சீப் கொண்டு போங்க.




தான் பெற்ற மகளை இழந்து தவிக்கும் ஒரு குழந்தை மனசுள்ள தந்தை கஷ்டப்பட்டு தன் அன்பு மகளை மீட்டு தன்னுடன் வைத்துக்கொள்ள போராடும் (ஒரு பாசத் தலைவனின்) பாசப்போராட்டம் தான் "தெய்வ திருமகள்".

படம் ஆரம்பம் முதலே தன் நடிப்பால் அசத்தும் அந்த தந்தையின் நடிப்பு மக்கள் அனைவராலும் கொண்டாடப் படுகிறது. பதிவர்களும் தங்கள் பங்குக்கு படத்தை பற்றி ஆகா ஓகோ வென்று புகழ்ந்து தள்ளியுள்ளனர். விழுந்து, தவழ்ந்து கஷ்டப்பட்டு நடித்த ஹீரோவுக்கு கண்டிப்பாக இந்த வருட தேசிய விருது உண்டு என்றும் ஆருடம் கூறுகின்றனர்.

படத்தின் கதையின் படி , கள்ளம் கபடம் அறியாத தந்தையும், மகளும் சென்னையில் சந்தோசமாய் வாழ்ந்து வருகின்றனர். தந்தை அந்த ஊரில் உள்ள ஒரு பீர் பாக்டரியில் வேலை செய்து அந்த குழந்தையை படிக்க வைக்கிறார். ஹீரோவுக்கு பீர் பாட்டில்களை சரியாக பெட்டியில் அடுக்கி சரியாக இருக்கிறதா? என எண்ணி பார்க்கும் வேலை.

இப்படியிருக்க கனி பள்ளிக்கூடம் செல்லும் இடத்தில் அங்கே தாளளராக இருக்கும் நிராராடியா என்கிற பெண்ணுக்கும், கனிக்கும் ஒரு பிரிக்க முடியாத பாச பந்தம் ஏற்படுகிறது. இவர்களுக்கு இடையேயான வசனங்களை மட்டும் தனியே ஆடியோவாக ரிலீஸ் செய்யும் அளவுக்கு உலக தரம் வாய்ந்தவை. ஆனால் பிரச்சினை நிராராடியாவின் மூலமாக வருகிறது என்பது தான் படத்தின் ட்விஸ்ட்.

ஒரு இளவரசி போல தன் தந்தையின் பாதுகாப்பில் சென்னையில் வாழ்ந்து வரும் அந்த கவிதாயினி குழந்தையை, கூடா நட்புகள் டெல்லி கூட்டி சென்று போய் தங்கள் வீட்டில் சிறை வைக்கின்றனர்.

அதன் பின் என்ன ஆகிறது?
தந்தை எப்படி தன் மகளை மீட்கிறார்?
பரபரப்பாக போகும் திரைக்கதையில் "கடைசியில் கனி யாருக்கு?" என்று தெரிந்து கொள்ள படத்தை வெள்ளி திரையில் காண்க.



தன் அருமை மகளை தேடி, தன்னந்தனியாய் டெல்லியில் அலையும் அந்த தந்தை பரிதவிக்கும் காட்சியில் மனம் பதறுகிறது.

தன் தாய்மொழியில் ஒழுங்காக நாலு வார்த்தை சேர்த்து பேச முடியாத சூழ்நிலையில், ஹிந்தி தெரியாமல் அவர் ரோட்டில் பார்க்கும் எல்லோரிடமும் "கனி" "கனி" என்று தமிழில் புலம்பியபடியே டெல்லியில் சுற்றி அலைவது பரிதாபம்.

இந்நிலையில் கனியை மீட்க இந்தியாவின் மிகவும் பிரபலமான வக்கிலிடம் தஞ்சம் அடைகிறார். இவருக்காக அவர் பல லட்சம் காசு வாங்கி கொண்டு வாதாட ஒப்பு கொள்கிறார். கோர்ட்டில் பிரபல வக்கிலுக்கும் எதிர் தரப்பு வக்கிலுக்கும் நடக்கும் வாதங்கள் மிகவும் சுவாரஸ்யம்.

படத்தின் வசனங்கள் எல்லாமே ஷார்ப். உதாரணமாக, கோர்ட்டில் நடக்கும் கேஸ் தொடர்பாக ஒரு பெண் நிருபர் எழுப்பும் கேள்விக்கு "நீயும் ஒரு பெண்தானே?", " இதயம் இருப்பதன் அடையாளம், கேள்வி கேட்காமல் இருப்பது" என்று சொல்லும் வசனம் டாப்.

கிளைமேக்ஸ் காட்சிகளில் கூண்டில் நின்று கொண்டு "எனக்கு கனி வேணும். நான் கனிய நல்லா பார்த்துக்குவேன்" என்று கதறும் காட்சியில் நம்மோடு சேர்த்து, நீதிபதியாக வரும் முண்டாசு தாத்தா மன்மோகனும் கண்கலங்குகிறார். "என்ன இருந்தாலும் இந்த கேஸ் சட்டத்தின் மேற்பார்வையில் நடப்பதால், தன்னால் எதுவும் செய்ய முடியாது" என்று நா தழுதழுக்க தன் இயலாமையை எடுத்து கூறுகிறார்.

ஒரு தொப்புள் காட்சி, அக்குள் காட்சி என்று துளியும் ஆபாசம் இல்லாமல் நீண்ட நாள் கழித்து வந்த ஒரு குடும்ப படம்.

"உங்கள் குழந்தை பருவத்தில் தான் நீங்கள் கடைசியாக அழுதது. அதற்கு பிறகு எதற்கும் அழுததில்லை என்று சீன் போடுபவரா நீங்கள்?" 

இதோ இந்த படம் உங்களுக்காக தான்.

கனியை கூட்டி சென்று சூடு போட்டு கொடுமை படுத்தியதால் வந்த கொப்புளத்தை பார்த்து கனியின் தந்தை வெந்து உருகுவதில் உங்கள் கல் நெஞ்சமும் கரையக் கூடும். கண்ணீர் துடைத்து கர்ச்சீப் நனைந்து விட்டால், கர்ச்சீப்பை இறுக்கி பிழிந்து முன் சீட்டில் காயப் போடுங்கள்.


இப்படம் நூறு நாளை கடந்து மக்களின் நல்லாதரவால் ஆரவாரமாகவும் அழுகாச்சியாகவும் ஓடி வரலாற்று சாதனை படைக்கும் என்பதில் ஐயமில்லை.

Related

தெய்வ திருமகள் - நமீதா விமர்சனம்



Jul 14, 2011

ரஜினியை கண்டுகொள்ளாத ரசிகர்கள்



நேற்று சிங்கபூரிலிருந்து உயிருடன் திரும்பிய ரஜினியை தமிழக மக்கள் யாருமே கண்டு கொள்ளவில்லை. அவர் நேற்று சென்னை விமான நிலையத்தில் வந்து இறங்கிய போது வழக்கமாக சோறு தண்ணி இல்லாமல் முண்டியடித்து கொண்டு அவரை பார்க்க வரும் பன்னாடை ரசிக கூட்டங்களை காணவில்லை.

விமானத்தை விட்டு இறங்கியதும் பிரபலங்களிடம் பேட்டி காண மைக்கை மூக்கில் நுழைக்கும் பிரபல டிவி சேனல்கள் மற்றும் பத்திரிக்கை நிருபர்கள் யாரும் சொல்லிவைத்தார் போல் ஆப்சென்ட். ரஜினி சென்னை மண்ணை மிதித்தது, ஒரு பெட்டி  செய்தியாக கூட எந்த தினசரியிலும் வரவில்லை. கலைஞர் சொன்னது போல் தமிழகத்தில் மீடியாக்களின் ஆட்சி நடக்கிறது என்பது வலுவாய் நிரூபிக்க பட்டுள்ளது.

ரஜினியின் அலகு குத்தும் ரசிகர்களும், இப்போது இளம் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் அவர்களின் ரசிகர்களாக மாறிவிட்டதாக செய்திகள் கசிந்துருகுகின்றன. மேலும் ராணா படம் வெளிவருவதும் சந்தேகமாக உள்ளது. தீபிக படுகோன் பவர் ஸ்டாரின் லத்திகா பார்ட் - 2 படத்துக்கு தன் கால்ஷீட்டை தூக்கி கொடுத்து விட்டதாக வதந்திகள் உலவி வருகின்றன.

ரஜினிக்கு லாபம் என்று சொல்லப்படுகின்ற எந்திரன் படமே கடைசி படமாக இருக்கும் என எதிர்பார்க்க படுகிறது. மருமகன் தனுஷும் தான் நடிக்கும் படங்களில், இனி தாத்தா அல்லது அப்பா ரோல்களை மட்டுமே தன்னால் வாங்கி தர முடியும் என ஆறுதல் சொல்லியுள்ளார்.

தமிழக மக்கள் நடிகர்களின் பின்னால் போகாமல் தங்கள் வேலைகளை பார்க்க ஆரம்பித்து விட்டனர். இப்போதெல்லாம் ரஜினி சாப்பிட்டது, தூங்கியது மற்றும் @#$% போனது என சராசரி நிகழ்வுகளான எதிலும் மக்கள் துளியும் ஆர்வம் காட்டுவதில்லை. ரஜினி வீட்டில் உள்ள வேலைக்காரன் கூட அவர் சாப்பிட்டதை கண்டுகொள்ளாமல் அவர் சாப்பிட்டு வெகு நேரம் ஆகியும் அவர் தட்டை கழுவாமல் வைத்திருந்ததாக அரசல் புரசலாக செய்தி வெளிவந்துள்ளது.

தமிழக மீடியாக்கள் மற்றும் மக்களின் இந்த மன மாற்றத்திற்கு என்ன காரணம் என்றும் சரியாக புலப்படவில்லை.

லத்திகா பார்ட் - 2 அதிரடி ஆரம்பம்



தமிழகத்தின் இளம் சிங்கம் பவர் ஸ்டார் சீனிவாசன் நடித்து, நூற்று ஐம்பது நாட்களுக்கு மேலாக திரையரங்கில் ஓடி கொண்டிருக்கும் "லத்திகா" என்ற திரைக் காவியத்தால் தமிழ் திரையுலகம் புத்துணர்ச்சி பெற்றுள்ளது.

இப்படத்தின் கலெக்சன், உலகம் முழுவதும் வெளியான அவதார் படத்தின் கலெக்சனை இன்னும் நான்கே நாட்களில் முறியடித்து விடும் என்ற செய்தி ஹாலிவுட் நடிகர்களையும், இயக்குனர்களையும் புருவம் உயர்த்த வைத்துள்ளது. இப்படத்தை காண ஜேம்ஸ் காமரூனும், டாம் குரூசும் விருப்பம் தெரிவித்துள்ளனர். ஒபாமாவும் இதை பார்க்க விரும்புவதாக சொன்ன செய்தி டைம்ஸ் பத்திரிக்கையின் தலைப்பு செய்தியாக வந்துள்ளது.

படத்தை ஆங்கில சப் டைட்டில் உருவாக்கி அடுத்த வருடத்திற்கான ஆஸ்கார் விருதுக்கு அனுப்புமாறு, ஆஸ்கார் கமிட்டி வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதனால் உலகநாயகன் முதல், சகல தமிழ் நடிகர்கள் அனைவரும் பயந்து, பீல்டில் தொடர்ந்து நிலைக்க, தங்கள் அடுத்தப் படத்துக்கான கதையை மிகுந்த கவனமுடன் கேட்டு வருகிறார்கள்.

எந்திரன் படத்தால் பாதிப்பு அடைந்த திரையரங்கு உரிமையாளர்கள், இப்படத்தின் லாபத்தால் அந்த கவலையை மறந்து மகிழ்ச்சியில் புன்னகை பூக்கின்றனர். திரையரங்குக்கு மக்கள் கூட்டம் கூட்டமாகவும், சாரை சாரையாகவும் தொடர்ந்து வந்து படத்தை பார்த்த வண்ணம் உள்ளனர்.

இதனால் இனி இருநூறு, முந்நூறு நாட்கள் என்று போஸ்டர் ஒட்டாமல், மொத்தமாய் காத்திருந்து "ஆயிரம் நாட்கள்" போஸ்டர் ஓட்டலாம் என்றும் பவர் ஸ்டார் பலமாக யோசித்து வருகிறாராம்.

இவருக்கு பெண்கள் மத்தியில் உள்ள கிரேஸ் எவ்வளவு என்பதற்கு, எஸ்.எஸ் மியூசிக் சேனல் நடத்திய "எனிதிங் பார் சீனி" என்ற நிகழ்ச்சி அந்த சேனலின் டி.ஆர்.பி ரேட்டிங்கை ஒரு மாதத்திற்கும் மேலாக எகிறச் செய்ததே சாட்சி. அந்த நிகழ்ச்சியில் ஒரு பெண் அவரை சந்திப்பதற்காக கூவத்திலும் குளிக்க ரெடி என்று தெரிவித்தார். இன்னொரு பெண் அவரின் கட்டுமஸ்தான உடலும், முரட்டு மீசையும் தன்னை தினமும் இரவில் இம்சிப்பதாக சொல்லி வழிந்தார்.

லத்திகாவின் வெற்றியை தொடர்ந்து லத்திகா பார்ட் 2 எடுக்கப் போவதாக அதிரடியாக அறிவித்துள்ளார் பவர் ஸ்டார். ஆனால் பார்ட் - 2 வை சீக்கிரம் எடுத்தாலும், இன்னும் ஒரு வருடம் கழித்தே வெளியிடுவதாயும் குறிப்பிட்டார். லத்திகா முதல் பார்ட்-இன், ஹெங் ஓவரே (Hang Over) இன்னும் மக்களிடம் போகாத நிலையே, அதற்கு காரணம் என்றும் தெரிவித்தார்.

லத்திகா பார்ட் 2 எடுக்கப் போவதாக வந்த செய்தியை அடுத்து, தமிழிலும் இந்தியிலும் முன்னணி நடிகைகளிடம் போட்டா போட்டி உருவாகியுள்ளது. நெருங்கி தோழிகளான திரிஷாவும் ஸ்ரேயாவும் ஒரு நைட் கிளப்பில் இவ்விசயத்தால் தலைமுடியை பிடித்து சண்டை போட்டுள்ளனர்.

அவருடன் நடிப்பது பற்றி அனுஷ்காவிடம் கேட்ட போது, அடுத்த இரண்டு வருடங்களுக்கு தன் கால்சீட் புல்லாக இருந்தாலும், பவர் ஸ்டாருடன் ஜோடி சேர அவர் எந்த படத்தின் கால்சீட்டையும் ட்ராப் செய்வதாக உணர்ச்சி வசப்பட்டு பேசினார்.

ஆனால் பவர் ஸ்டார் என்ன நினைக்கிறார் என்ற ஆவலில் அவரை தொடர்பு கொண்டு கேட்டபோது, அவரின் சாய்ஸ் தீபிக படுகோன் அல்லது சொனாக்சி சின்கா. வயசானதால் ஐஸ்வர்யாவை அவர் கணக்கில் எடுத்து கொள்ள வில்லை. காத்திரீனா கைப்பையும் கண்ணசைவில் கழட்டி விட்டார்.

ஏகப்பட்ட தமிழ் நடிகர்களிடம் நடிக்க மறுத்து அவமான படுத்திய இலியானா, பவர் ஸ்டார் வீட்டு வாசலில் வாய்ப்பு கேட்டு பலமணி நேரம் நின்றும், அவர் கதவை திறக்க வில்லை. மனதையும் திறக்க வில்லை.

லத்திகா பார்ட் - 2, 2012 ஆம் ஆண்டின்  இறுதியில் வெளியாகி, ஆண்டுகள் கணக்காக வெற்றிநடை போட்டு, "மாயன்ஸ் காலண்டர் படி 2012 - இல் உலகம் அழியும்" என்ற கூற்றையும் முற்றிலும் பொய்யாக்கும் என்பதே நம் எல்லோருடைய நம்பிக்கை.

Jul 13, 2011

கசாபுக்கு பிரதமர் பிறந்தநாள் வாழ்த்து



நேற்று தனது இருபத்தி நான்காவது வயதை அடைந்த வீர திருமகன் கசாபுக்கு நம் இந்திய பிரதமர் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார். அப்படியே மும்பை குண்டு வெடிப்பில் இறந்த மக்களுக்கு தன்னால் முடிந்த அனுதாபங்களையும் தெரிவித்தார். "பாதுகாப்பு" போன்ற விசயங்களை அளிப்பது எதுவும் தன் கையில் இல்லை என்றும் கையை விரித்து காண்பித்தார். வாழ்த்தும், அனுதாபமும் தெரிவிப்பதே தன் தலையாய கடமையாக கொண்டு சிறப்பாக தொண்டாற்றிவரும் பிரதமரை அன்னை சோனியா காந்தியும் பாராட்டினார். பிரதமருக்கு பின் ஒவ்வொரு அமைச்சரும் தங்கள் அனுதாபங்களை வரிசையில் நின்று தெரிவித்தனர்.

தன் பிறந்த நாளை கசாப் கேக் வைத்து கொண்டாட, அங்கே மும்பையில் அவரது தீவிர (வாத) நண்பர்கள் பட்டாசிற்கு பதிலாக குண்டு வெடித்து கொண்டாடி இருக்கிறார்கள். காசாப் வெட்டிய கேக்கிற்குள் கேண்டிலுக்கு பதிலாக சின்ன சின்ன சிக்கன் லேக் பீஸ் துண்டுகள் வைத்து சிறை அதிகாரிகள் வழங்கியதாக தெரிவித்தனர்.

ரயில்வே அமைச்சரை போல் அல்லாமல் குண்டு வெடித்த இடங்களுக்கு விரைந்து சென்று பார்வை இட்ட உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்தை பிரதமர் உளமார பாராட்டினார். "இந்த தாக்குதலுக்கு என்ன நடவடிக்கை எடுக்கப் படும்?" என்ற கேள்விக்கு சிறிதும் தாமதிக்காமல் "சட்டம் எப்போதும் போல தன் கடமையை செய்யாது" என்று திட்டவட்டமாக சொன்னார்.

"இந்தியாவின் மக்கள் தொகை பெருக்கத்தை பற்றி கவலை படும் போது, இது போன்ற தாக்குதல்கள் அதை சற்றே தணிக்கின்றன. இனி மும்பை மக்கள் அடுத்த வெடிகுண்டு தாக்குதலுக்கு எந்நேரமும் தயாராய் இருக்க வேண்டும். எவ்வளவு குண்டு போட்டாலும் அமைதியாய் எதிர்கொள்வதால் இந்தியா மற்ற நாடுகளுக்கு அமைதிக்கான முன்னுதாரணமாய் விளங்குகிறது. எவ்வளவு அடிச்சாலும் தாங்கறாங்க. இவங்க ரொம்ப நல்லவங்க என்று நினைத்து இந்தியா மீதான தன் தாக்குதலை பாகிஸ்தான் விட்டு விடும்" என்று தெரிவித்தார்.